Tuesday, June 23, 2009

பக்தி ராகம்-பிலஹரி

பல்லவி

பக்தியினாலெ-தெய்வ-பக்தியினாலே

சரணங்கள்

1. பக்தியினாலே-இந்தப்
பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!
சித்தந் தெளியும்,-இங்கு
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,
வித்தைகள் சேரும்,-நல்ல
வீர ருறவு கிடைக்கும்,மனத்திடைத்
தத்துவ முண்டாம்,நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும். (பக்தி)

2. காமப் பிசாசைக்-குதி
கால்கொண் டடித்து விழுந்திடலாகும்;இத்
தாமசப் பேயைக்-கண்டு
தாக்கி மடித்திட லாகும்;எந்நேரமும்
தீமையை எண்ணி-அஞ்சுந்
தேம்பற் பிசாசைத் திருகியெ றிந்துபொய்ந்
நாம மில்லாதே-உண்மை
நாமத்தி னாலிங்கு நன்மை விளைந்திடும். (பக்தி)

3. ஆசையைக் கொல்வோம்,-புலை
அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம்,கெட்ட
பாச மறுப்போம்,-இங்குப்
பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை
மோசஞ் செய்யாமல்-உண்மை
முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர்
ஈசனைப் போற்றி-இன்பம்
யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம். (பக்தி)

4. சோர்வுகள் போகும்,-பொய்ச்
சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெறலாகும்,நற்
பார்வைகள் தோன்றும்-மிடிப்
பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல
சேர்வைகள் சேரும்,-பல
செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்,
தீர்வைகள் தீரும்-பிணி
தீரும்,பலபல இன்பங்கள் சேர்ந்திடும். (பக்தி)

5. கல்வி வளரும்,-பல
காரியங் கையுறும்,வீரிய மோங்கிடும்,
அல்ல லொழியும்,-நல்ல
ஆண்மை யுண்டாகும்,அறிஉ தெளிந்திடும்,
சொல்லுவ தெல்லாம்-மறைச்
சொல்லினைப் போலப் பயனுள தாகும்,மெய்
வல்லமை தோன்றும்,-தெய்வ
வாழ்க்கையுற் றேயிங்கு வாழ்ந்திடலாம்-உண்மை.

6. சோம்ப லழியும்-உடல்
சொன்ன படிக்கு நடக்கும்,முடி சற்றுங்
கூம்புத லின்றி நல்ல
கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும்,
வீம்புகள் போகும்-நல்ல
மேன்மை யுண்டாகிப் புயங்கள் பருக்கும்,பொய்ப்
பாம்பு மடியும்-மெய்ப்
பரம் வென்று நல்ல நெறிகளுண் டாய்விடும் (பக்தி)

7. சந்ததி வாழும்,-வெறுஞ்
சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும்,
'இந்தப் புவிக்கே-இங்கொர்
ஈசனுண்டா யின் அறிக்கையிட் டேனுன்றன்
கந்தமலர்த்தாள்-துணை;
காதல் மகவு வளர்ந்திட வேண்டும்,என்
சிந்தையறிந்தே-அருள்
செய்திட வேண்டும்'என்றால் அருளெய்திடும்.(பக்தி)

No comments:

Post a Comment