நாம கட்குப் பெருந்தொண் டியற்றிப்பல்
நாட்டி னோர்தம் கலையிலும் அவ்வவர்
தாம கத்து வியப்பப் பயின்றொரு
சாத்தி ரக்கடலென விளங்குவோன்,
மாம கட்குப் பிறப்பிட மாகமுன்
வாழ்ந்திந் நாளில் வறண்டயர் பாரதப்
பூம கட்கு மனந்துடித் தேயிவள்
புன்மை போக்குவல் என்ற விரதமே.
நெஞ்ச கத்தோர் கணத்திலும் நீங்கிலான்
நீத மேயோர் உருவெனத் தோன்றினோன்,
வஞ்ச கத்தைப் பகையெனக் கொண்டதை
மாய்க்கு மாறு மனத்திற் கொதிக்கின்றோன்,
துஞ்சு மட்டுமிப் பாரத நாட்டிற்கே
தொண்டிழைக்கத் துணிந்தவர் யாவரும்
அஞ்செ ழுத்தினைச் சைவர் மொழிதல்போல்
அன்பொ டோ தும் பெயருடை யாவரின்.
வீர மிக்க மராட்டியர் ஆதரம்
மேவிப் பாரத தேவி திருநுதல்
ஆர வைத்த திலகமெனத் திகழ்
ஐயன் நல்லிசைப் பாலகங் காதரன்,
சேர லர்க்கு நினைக்கவுந் தீயென
நின்ற எங்கள் திலக முனிவர்கோன்
சீர டிக்கம லத்தினை வாழ்த்துவேன்
சிந்தை தூய்மை பெறுகெனச் சிந்தித்தே.
Monday, June 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment